கோடை கால சிறப்பு முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கோடை கால சிறப்பு முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருச்சி:
திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபிள் கிளப் தொடங்கப்பட்டது. இங்கு மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 215 நிரந்தர உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளம், 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளம், 10 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவ-மாணவிகளுக்கு ஏர்-ரைபிள் பயிற்சிக்கான முதல் பேட்ச் கோடைகால சிறப்பு முகாம் 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடந்தது. முதல் பேட்சில் 10 மீட்டர் ஏர்-ரைபிள் போட்டியில் 22 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சுபர்ணா, யோகேஷ்வரன், கணபத்தர்ஷனா ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் ரைபிள் கிளப் செயலாளர் செந்தூர்செல்வன் கலந்து கொண்டார். நேற்று தொடங்கிய 2-வது பேட்சுக்கான முகாம் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.