குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல்


குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 May 2022 5:37 PM GMT (Updated: 16 May 2022 5:37 PM GMT)

வீ சித்தாமூர் கிராமத்தில் 5 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள வீ.சித்தாமூர் ஊராட்சிக்குட்பட்ட மேட்டு காலனி பகுதியில் கடந்த 5 நாட்களாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்  திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தை கைவிட பொதுமக்கள் மறுத்து விட்டனர்.  இதைத் தொடர்ந்து முகையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாம்ராஜ் அங்கு வந்து சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் வினியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story