மோடி ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட இரும்பு பெட்டியில் என்ன இருந்தது?


மோடி ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட இரும்பு பெட்டியில் என்ன இருந்தது?
x
தினத்தந்தி 15 April 2019 11:38 AM GMT (Updated: 15 April 2019 12:11 PM GMT)

மோடி ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட இரும்பு பெட்டியில் என்ன இருந்தது? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி கடந்த 9-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவரது பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன.

அந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள்.

2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது.

ஆனால் அந்த பெட்டியில் பிரதமர் பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இருந்ததாக பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

பிரதமர் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய கருப்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவேளை அதில் பணம் இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் அதில் என்ன இருந்தது என்ற உண்மை வெளியே வர வேண்டும். இது சம்பந்தமாக தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தி அதன் விபரத்தை வெளியிட வேண்டும்.

ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியை தனியார் இன்னோவா காரில் ஏற்றி இருக்கிறார்கள். உடனே அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்த கார் சிறப்பு பாதுகாப்பு படையினர் அணிவகுப்பில் இடம் பெறவில்லை. இதுதான் பெரும் சந்தேகமாக உள்ளது.

கர்நாடக மாநிலம் காங்கிரஸ் சார்பில் இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து தேர்தல் கமி‌ஷன் தான் தனது கடமையை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆனந்த்சர்மா கூறினார்.

இது குறித்து சித்ரதுர்க்கா பகுதி பா.ஜ., தலைவர் நவீன் கூறி இருப்பதாவது;-

‛‛காங்கிரஸ்  ஆட்சியில் இருந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, பிரதமருக்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள் பற்றி அவர்கள் மறந்து விட்டனர். கறுப்பு பெட்டியில் டெலிபிராம்பரும் மற்றும் சில கருவிகளும் மட்டுமே இருந்தன'' என்று டுவீட் செய்திருந்தார்.

உண்மையில் இந்த பெட்டியில் சில எலக்ட்ரானிக் பொருட்கள், வயர்கள், பிரதமர் பேசும் மேடையில் வைப்பதற்கான சில கட்சி சின்னங்களும் இருந்ததாக தெரிகிறது.மோடி பேசும்போது, டெலிபிராம்டர் என்ற கருவியை பயன்படுத்துவார். அவர் பேசும் தொகுதிகள், மாநிலங்கள் பற்றிய விபரங்கள் அதில் ஏற்கனவே பதியப்பட்டு, பேசும்போது அதில் தெரியும். அதை வைத்து தான் அவர் பேசுவார். இதனால் அவர் பேப்பர் எதையும் பார்த்து பேச வேண்டிய அவசியம் இருக்காது.ஆனால் பார்ப்பவர்களுக்கு எதையும் படிக்காமல், மக்களைப் பார்த்து மோடி பேசுவது போல் தெரியும்.

நவீன் மேலும் கூறும்போது, ‛‛பிரதமர் மேடைக்கு செல்வதற்கு முன்பு 10 நிமிடங்களுக்குள் இந்த கருவிகள் கொண்டு செல்லப்பட வேண்டும். பிரதமரை அங்கிருப்பவர்கள் வரவேற்று முடிப்பதற்குள் இந்த வேலையை செய்தாக வேண்டும். காரில் கொண்டு செல்லப்பட்டால், பிரதமர் பேசுவதற்குள் இந்த பெட்டியை மேடைக்கு கொண்டு சென்று, கருவிகளை தயார் செய்ய முடியாது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.,) தான் இவற்றை கையாள்கிறது. பிரதமரின் கான்வாயில் வரும் அனைத்து வாகனங்களும் மத்திய ஐ.ஜ., மேற்பார்வையில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். பிரதமருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை கூறுவதற்கு முன், காங்., கட்சியினர் பொது அறிவை பயன்படுத்த வேண்டும் '' என்றார்.

Next Story