தர்மபுரியில் தேர்தலின் போது 10 வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதா? விசாரணைக்கு கோரிக்கை


தர்மபுரியில் தேர்தலின் போது 10 வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதா? விசாரணைக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 19 April 2019 12:07 PM GMT (Updated: 19 April 2019 12:49 PM GMT)

தர்மபுரியில் தேர்தலின் போது 10 வாக்குசாவடிகளில் மோசடி நடைபெற்றுள்ளது, அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது.

தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் கட்சியினர் மாலை மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி செய்துள்ளனர் என திமுக புகார் கொடுத்தது. இந்நிலையில் தர்மபுரி தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது நத்தமேடு கிராமத்தில் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்களிக்க வந்தவருக்கு கையில் மையை மட்டும் வைத்துவிட்டு ஓட்டை குறிப்பிட்ட கட்சியினர் பதிவு செய்தனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையத்தில் சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு இந்த முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. புகார் காரணமாக வாக்குப்பதிவின் போது நத்தமேடு வாக்குச்சாவடியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி பலமுறை ஆய்வு செய்தார். அதையும் மீறி அங்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நத்தமேட்டில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  2016 சட்டமன்றத் தேர்தலிலும் நத்தமேடு வாக்குச்சாவடியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் பூத் சிலிப் கொண்டும் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, பணம் வாங்கிக்கொண்டு கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. வாக்காளரின் வாக்கை அங்கிருந்த குறிப்பிட்ட கட்சியின் பிரமுகர்கள் பதிவு செய்தனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணி சார்பாக தேர்தல் அதிகாரியிடம் வழக்கறிஞர் நீலகண்டன் புகார் மனு அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பூத் சிலிப் மட்டும் வைத்து பா.ம.க வாக்களித்து இருக்கிறது. 10 வாக்குச்சாவடி மையத்தில் இதுபோல் நடந்துள்ளது. நத்தமேடு பகுதியில் நடந்துள்ளது. மறு வாக்குப்பதிவு நடத்த கோரியுள்ளோம். அதேபோல் சிசிடிவி கேமிரா பயன்பாடு இல்லாமல் இருந்த நிலை குறித்தும் புகார் தெரிவித்துள்ளோம். மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டு நடவடிக்கை எடுப்போம் எனத் தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ எங்களிடம் கூறியுள்ளார் என்றார்.

மோசடி தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதாக ஆட்சியர் மலர்விழியும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே வாக்குச்சாவடியில் முறைகேடு தொடர்பான அதிகமான புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது என சாஹூ கூறியுள்ளார்.

Next Story