சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14–ந்தேதி மகர விளக்கு பூஜை


சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14–ந்தேதி மகர விளக்கு பூஜை
x
தினத்தந்தி 8 Jan 2017 12:00 AM GMT (Updated: 7 Jan 2017 10:46 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14–ந் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14–ந் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில்

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 15–ந் தேதி திறக்கப்பட்டது. அதன்பின்பு தினமும் அய்யப்ப சாமிக்கு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்து வருகிறது.

ஏராளமான பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டும், தரிசனத்திற்கான காலதாமதத்தை குறைக்கும் வகையிலும் கூடுதல் நேரம் பூஜை, வழிபாடு நடைபெற்று வருகிறது.

மகர விளக்கு பூஜை

இந்தநிலையில் அங்கு பிரசித்திபெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் 14–ந் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அய்யப்பன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மகர விளக்கு தினத்தில் அய்யப்ப சாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், 12–ந்தேதி பத்தனம்திட்டை மாவட்டம் பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோரிடம் 14–ந்தேதி மாலை ஒப்படைக்கப்படும்.

20–ந்தேதி நடை அடைப்பு

பின்பு திருவாபரணங்கள், அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து 6.30 மணி அளவில் பொன்னம்பலமேட்டில் ஜோதிவடிவில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் தருவார்.

19–ந்தேதி வரை படிபூஜை நடைபெறும். 20–ந் தேதி காலை மன்னர் பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் நடை அடைக்கப்படும்.  மீண்டும் மாசி மாத பூஜைக்காக கோவில் நடை அடுத்த மாதம் (பிப்ரவரி) 12– ந் தேதி திறக்கப்படும்.

Next Story