மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு சென்றார்


மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு சென்றார்
x
தினத்தந்தி 10 March 2017 5:52 AM GMT (Updated: 10 March 2017 5:52 AM GMT)

கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சோதனைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்.


புதுடெல்லி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பல மாதங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற வாகன பேரணியின்போது திடீரென அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சோனியா டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தனியார் மருத்துமனையிலும் அவர் சிகிச்சை பெற்றார்.

தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கட்சி உட்பட எந்த வெளி நிகழ்ச்சிகளிலும் சோனியா கலந்த கொள்ளவில்லை.

அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும் சோனியா காந்தி பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், சோனியாகாந்தி திடீரென வெளிநாடுக்கு புறப்பட்டு சென்றார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருப்பதாகவும், ஹோலி பண்டிகை முடிந்த பிறகு வரும் 13-ந் தேதிதான் டெல்லி திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சோனியா எந்த நாட்டுக்கு சென்றுள்ளார், எங்கு சிகிச்சை பெறுகிறார் போன்ற எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. அனேகமாக அவர் அமெரிக்கா சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பு, கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய சோனியா காந்தி டெல்லி திரும்பும்வரை, அவரது கட்சிப்பணிகளை ராகுல் காந்தி கவனிப்பார் என அறிவித்தார்.

Next Story