மம்தா பானர்ஜிக்கு எதிராக சர்ச்சை கருத்து: பாரதீய ஜனதா நிர்வாகியின் பேச்சுக்கு அக்கட்சி கண்டனம்


மம்தா பானர்ஜிக்கு எதிராக சர்ச்சை கருத்து: பாரதீய ஜனதா நிர்வாகியின் பேச்சுக்கு அக்கட்சி கண்டனம்
x

மம்தா பானர்ஜிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா நிர்வாகியின் பேச்சுக்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பிர்பம் மாவட்டத்தில் ஹனுமன் ஜெயந்தியை நினைவுகூறும் வகையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.  இந்த பேரணிக்கு போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பேரணியாக சென்றவர்கள் அந்த வழியாக இருந்த மதராசா சாலைக்குள் செல்ல முற்பட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், கடும் அதிருப்தி அடைந்த பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி அமைப்பான யுவமோர்ச்சாவின் தலைவர் யோகேஷ் வர்ஷ்னே மம்தா பானர்ஜியை அரக்கன் என்று விமர்சித்தார். 

மேலும், யாராவது மம்தா பானர்ஜி தலையை வெட்டிக்கொண்டு  என்னிடம் வந்திருந்தால் அவர்களுக்கு ரூ. 11 லட்சம் வழங்கியிருப்பேன். மம்தா பானர்ஜி இந்துக்களை குறிவைத்து அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்” என்றார். மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் வழங்கப்படும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்களவை கூடியதும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி சவுகதா ராய் இவ்விவகாரத்தை முன்வைத்து பேசினார். பாஜக நிர்வாகியின் இத்தகைய பேச்சை கண்டிப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை என்றார். மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியும் இத்தகைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய முக்தர் அப்பாஸ் நக்வி, இது போன்ற பேச்சுக்களுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். மாநில அரசு உரிய நடவடிக்கையை அவர் மீது எடுக்க வேண்டும்” என்றார்.

Next Story