முலாயம் சிங் தலைமையில் புதிய கட்சி சிவபால் யாதவ் அறிவிப்பு


முலாயம் சிங் தலைமையில் புதிய கட்சி சிவபால் யாதவ் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2017 10:45 PM GMT (Updated: 5 May 2017 8:16 PM GMT)

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு முலாயம் சிங் யாதவுக்கும், அவருடைய மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு முலாயம் சிங் யாதவுக்கும், அவருடைய மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து முலாயம் சிங் யாதவ், அவருடைய சகோதரர் சிவபால் யாதவ் ஆகியோரை கட்சி பொறுப்பில் இருந்து வெளியேற்றி விட்டு சமாஜ்வாடி கட்சிக்கு அகிலேஷ் யாதவ் பொறுப்பு ஏற்றார். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் சிவபால் யாதவ் நேற்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அகிலேஷ் யாதவ் கட்சி பொறுப்பை முலாயம் சிங் யாதவிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக அவருக்கு 3 மாதம் கெடு விதித்து இருந்தேன். ஆனால் அவரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

எனவே சமாஜ்வாடி மதச்சார்பற்ற முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குகிறேன். இந்த கட்சிக்கு தேசிய தலைவராக முலாயம் சிங் யாதவ் இருப்பார். அவருடைய தலைமையில் சமாஜ்வாடி கட்சி தொண்டர்களை ஒருங்கிணைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story