ஜனாதிபதி தேர்தல்: நாடு முழுவதும் சென்று ஆதரவு கோருகிறார் ராம்நாத்கோவிந்த்
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேஜகூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத்கோவிந்த் நாளை முதல் எம்.பி, எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கோர உள்ளார்.
லக்னோ,
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ராம்நாத்கோவிந்தும் எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆளும் கட்சி தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், நாளை முதல் தனக்கு ஆதரவாக வாக்களிக்க கோரி நாடு முழுவதும் எம்.பி,.எம்.எல்.ஏக்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். தனது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள எம்.பி.எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கோர முடிவு செய்துள்ளார். இதன் பிறகு நாளையில் இருந்து நாடு முழுவதும் சென்று மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார். அவருடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் செல்ல இருக்கிறார்கள்.
ராம்நாத் கோவிந்துக்கு 15-க்கும் மேற்பட்ட கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவு அவருக்கு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு 61 சதவீதம் வாக்குகள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
Related Tags :
Next Story