தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவித்த சச்சின்: மும்பை பாந்தரா பகுதியை சுத்தம் செய்தார்


தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவித்த சச்சின்: மும்பை பாந்தரா பகுதியை சுத்தம் செய்தார்
x
தினத்தந்தி 26 Sep 2017 10:40 AM GMT (Updated: 26 Sep 2017 10:39 AM GMT)

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மும்பை பாந்தரா பகுதியிலுள்ள தெருக்களை சுத்தம் செய்தார்.

மும்பை,

பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தியாவிலுள்ள நடிகர் நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தில் இணைந்து சேவை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் சிவ சேனா கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தாக்ரே சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மும்பை பாந்தரா பகுதியில் உள்ள தெருக்களை சுத்தம் செய்தனர்.

இது தொடர்பாக சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் கூறியதாவது:

நமது இந்தியாவை சுத்தமாக வைத்துக்கொள்ள நாம் ஒவ்வொருவரும் உதவி செய்ய வேண்டும். உங்கள் நண்பர்களை அழைத்துக்கொள்ளுங்கள். சுத்தம் செய்ய ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். நாம் ஒன்றாக இணைந்து நமது நாட்டை சுத்தம் செய்வோம். நாம் ஒவ்வொருவரும் இணைந்து தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம். குப்பைகளை கண்ட இடத்தில் வீசாமல் குப்பை தொட்டியில் போட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். குப்பைகளை தெருக்களில் வீசி நகரத்தை கெடுக்க வேண்டாம்.  அழகான பூமியை பார்க்கும் போது ஆங்காங்கே குப்பைகள் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story