ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
புதுடெல்லி,
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதில் வர்த்தகர்கள் தாங்கள் செய்யும் சரக்கு கொள்முதல் மற்றும் வினியோகம் தொடர்பாக ஜி.எஸ்.டி.ஆர்–1, ஜி.எஸ்.டி.ஆர்–2 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்–3 என்னும் மூன்று வித கணக்குகளை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் ஜூலை மாதத்துக்கான ஜி.எஸ்.டி.ஆர்–1 கணக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி அக்டோபர் 1–ந்தேதி ஆகும். அதன்படி 46 லட்சத்து 54 ஆயிரம் வர்த்தகர்கள் தங்களது கணக்குகளை தாக்கல் செய்தனர். ஜூலை மாதத்துக்கான ஜி.எஸ்.டி.ஆர்–2 கணக்கை தாக்கல் செய்ய இன்று(அக்டோபர் 31–ந்தேதி) கடைசி நாள் ஆகும். ஆனால் இதுவரை 12 லட்சம் வர்த்தகர்களே இந்த கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனால் மீதமுள்ள பல லட்சக்கணக்கான வர்த்தர்கள் இந்த கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடுவை அடுத்த மாதம்(நவம்பர்) 30–ந்தேதி வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.
இதேபோல் ஜி.எஸ்.டி.ஆர்–3 கணக்கை டிசம்பர் 11–ந்தேதிக்குள்(முந்தைய அவகாசம் நவம்பர் 11–ந்தேதி) தாக்கல் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.