கண்டியில் மீண்டும் மதவாத மோதல் ஏற்பட்டதும் பாதுகாப்பு படைகள் உஷார்!


கண்டியில் மீண்டும் மதவாத மோதல் ஏற்பட்டதும் பாதுகாப்பு படைகள் உஷார்!
x
தினத்தந்தி 9 March 2018 9:41 AM GMT (Updated: 9 March 2018 9:41 AM GMT)

கண்டியில் மீண்டும் மதவாத மோதல் நேரிட்டதும் பாதுகாப்பு படைகள் அதிஉயர் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. #KandyViolence

கொழும்பு, 

கண்டியில் வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு மசூதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையிலான மோதல் நாடு முழுவதும் பரவலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு உஷார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

கண்டியில் சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே மதவாத மோதல் வெடித்ததும் நாடு முழுவதும் செவ்வாய் கிழமை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டாலும் அங்கு நிலை மாறவில்லை, இஸ்லாமியர்கள் இலக்காக்கப்பட்டு வருகிறார்கள் என்ற செய்தியானது தொடர்ந்து வெளியாகிய வண்ணமே உள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று இஸ்லாமியர்கள் மசூதிகளில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம், எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நேரிடாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கண்டியில் கடந்த திங்கள் கிழமையில் இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் மோதலில் இருவர் பலியாகி உள்ளனர். அதிகமான வீடுகள், வணிக தளங்கள், மசூதிகள் சிதைக்கப்பட்டு உள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் வன்முறை சம்பவங்கள் எதுவும் நேட்டுவிடாத வண்ணம் அங்கு பாதுகாப்பு அதிஉயர் உஷார் நிலைப்படுத்தப்பட்டு உள்ளது. இஸ்லாமியர்களின் வணிகம் இன்றும் முடங்கியே காணப்படுகிறது. தலைநகர் கொழும்புவிலும் இஸ்லாமியர்களின் தொழில் மையங்கள் இன்று மூடப்பட்டது. மசூதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளன. 

கடந்த 12 மணிநேரங்களாக கண்டியில் அமைதியான நிலையே காணப்படுகிறது. நகரில் மசூதிகளுக்கு பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு வழங்கி வருகிறது, கூடுதல் உஷார் நிலையாக பாதுகாப்பு படைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கண்டியில் 3,000 போலீசார், 2500 பாதுகாப்பு படை வீரர்கள், 750 சிறப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு அங்கு தளர்வு செய்யப்பட்ட போது வன்முறையாளர்கள் இஸ்லாமியர்கள் பகுதியை தாக்க முயற்சி செய்து உள்ளனர். அதனை ராணுவம் தடுத்து நிறுத்தியது. இருப்பினும் இஸ்லாமியர்களை குறிவைத்து கல் வீச்சு தாக்குதல் நடந்து உள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்திற்கு இடமானோரை போலீஸ் கைது செய்து கொழும்பு அழைத்து சென்று உள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சிறிசேனா அரசு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதுவரையில் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 81 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story