குஜராத்தில் கொடூரம்: சிறுமி கடத்தி கற்பழித்து கொலை
குஜராத்தில் சிறுமி ஒருவர் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். முட்புதரில் பிணமாக கிடந்த அவரது உடலில் 86 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது.
சூரத்,
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தில் இளம் பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் சிறுமி ஒருவர் சிறைவைக்கப்பட்டு கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் பெஸ்டன் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே முட்புதருக்குள் ஒரு சிறுமி பிணமாக கிடந்தாள். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் பிணமாக கிடந்த சிறுமிக்கு 9 முதல் 11 வயது இருக்கும் என்றும் அந்த சிறுமியை சிலர் கடத்திச்சென்று சிறைவைத்து கற்பழித்து பின்னர் கொலை செய்து வீசிவிட்டு சென்று இருப்பது தெரியவந்தது. பிணமாக கிடந்த சிறுமியின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமியின் உடலில் 86 இடங்களில் காயம் இருப்பதாகவும் இது இயற்கையான காயங்கள் இல்லை என்றும் அந்த சிறுமியை ஒருவாரகாலமாக அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியும் கற்பழித்தும் கொலை செய்து இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமி பற்றிய தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story