கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய்-தந்தை-மகளை விஷம் வைத்து கொன்ற பெண் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய்-தந்தை-மகளை விஷம் வைத்து கொன்ற பெண் கைது
x
தினத்தந்தி 26 April 2018 7:09 AM GMT (Updated: 26 April 2018 7:09 AM GMT)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை உள்பட 3 பேரை இளம்பெண் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூர்

கேரளாவின் தலச்சேரி பினராய் பகுதியில் வசித்த குஞ்சிகண்ணன். இவரது மனைவி கமலா. இவர்களது மகள் சவுமியா. திருமணமாகி ஐஸ்வர்யா, கீர்த்தனா என்ற 2 மகள்கள் இருந்தனர். சவுமியாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சில வாலிபர்களுடன் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த விஷயத்தை அறிந்தஅவரது கணவர் மனைவியை கடுமையாககண்டித்துள்ளார். ஆனாலும் அவர் கேட்காததால் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதையடுத்து சவுமியா தனது இரண்டுகுழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இளைய மகள் கீர்த்தனா திடீரென இறந்து விட்டார். கீர்த்தனா, உடல் நலக்குறைவால் இறந்ததாக சவுமியா கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 21ம் தேதி சவுமியாவின் மகள் ஐஸ்வர்யாவும், மார்ச் 7ம் தேதி சவுமியாவின் தாய் கமலாவும், ஏப்ரல் 13ம் தேதி தந்தை குஞ்சி கண்ணனும் உடல் நல குறைவால் இறந்துள்ளார்கள். இவர்களதுஉடல்கள் பிரேத பரிசோதனை செய்யாமலே அடக்கம் செய்யப்பட்டன.

தொடர்ந்து இறந்ததால், சந்தேகமடைந்தஅக்கம் பக்கத்தினர் கேட்டதற்கு கிணற்றில் அமிலத் தன்மை உள்ள தண்ணீர் இருந்ததாகவும், அதை குடித்ததால் மகள் மற்றும் பெற்றோர் இறந்து விட்டதாகவும் கூறி சமாளித்தார் சவுமியா. ஆனால் 4 பேரின் மரணத்திலும் மர்மம் இருப்பதாக அக்கம் பக்கத்தினர், உறவினர்களும்,அந்த பகுதியினர் தலச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சவுமியா கடந்த சில தினங்களுக்கு முன்பு தலச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இது தொடர்பாக போலீசார் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். அப்போது சவுமியா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்ததால் கிடுக்குப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கள்ளக்காதலுக்கு தனது பெற்றோர் மற்றும் மகள் ஐஸ்வர்யா இடையூறாக இருந்ததால் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுவிட்டேன் என போலீசில் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் நேற்று முன்தினம் மருத்துவமனையில் வைத்து கைது செய்தனர்.

சவுமியாவின் இளைய மகள் கீர்த்தனா. இவர் கடந்த 6 வருடத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்ததாக சவுமியா தெரிவித்தார். ஆனால் இளைய மகளையும் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக சவுமியாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொலை தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்றோர் மற்றும் பெற்ற மகளை கொலை செய்த விவகாரம் கண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே சவுமியாவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த பலருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 2 பேருடன் உல்லாசமாக இருந்ததை மகள் ஐஸ்வர்யா பார்த்துள்ளார். இது குறித்து தாத்தா பாட்டியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுமியா மகளுக்கு பொரித்த மீனில் எலி விஷம் கலந்து கொடுத்துள்ளார். சிறுமி வாந்தி மயக்கம் ஏற்பட்டு இறந்தார். யாரும் சந்தேகிக்கவில்லை.

மகளின் மோசமான நடவடிக்கையை பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இதனால் அவர்களையும் கொல்ல திட்டமிட்டார். இதன்படி கடந்த மார்ச் 7ம் தேதி தாயாருக்கு மீன் குழம்பில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டார். அந்த சமயத்தில் கிணற்றில் அமிலம் கலந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதித்ததில் கிணற்றில் அப்படி எந்த அமிலமும் இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தந்தைக்கு ரசத்தில் விஷம் கலந்துகொடுத்து கொன்றார். இதன் பின்னர்தான் சந்தேகம் எழுந்தது. முதல்வருக்கும் புகார் சென்றது. தனது சொந்த ஊரில் அடுத்தடுத்து மரணம் நடந்தது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நடந்த தீவிர விசாரணையில் சவுமியா சிக்கினார். சவுமியாவுடன் தொடர்புடைய 2 வாலிபர்கள், விஷம் வாங்கி கொடுத்த ஆட்டோ டிரைவர் என 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் கொலையை சவுமியா மட்டுமே செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story