சட்டசபை தேர்தலில் வாக்களித்தால் பெற்றோரின் குழந்தைகளுக்கு 4 மதிப்பெண்கள்
கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு 4 மதிப்பெண்கள் வழங்க அம்மாநில தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
பெங்களூர்
கர்நாடக மாநிலத்தில் வருகிற 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் அனைத்து மக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் அதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அம்மாநில தனியார் பள்ளிகள் வாக்களிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு 4 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், வாக்களித்த பெற்றோர்கள் விரலில் வைக்கப்பட்ட மையை பள்ளியில் காண்பிக்க வேண்டும். அப்படி தந்தை காட்டினால் இரண்டு மதிப்பெண்களும், தாய் காட்டினால் இரண்டு மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடகா மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மை கழக பொதுச்செயலாளர் ஷஷி குமார் கூறியதாவது:
"பெற்றோர் தங்களது மையிட்ட விரலை காண்பித்து, பிள்ளைகளின் விவரங்களை தெரிவிக்கலாம். விவரங்களை குறித்த பின்னர், இன்டர்னல் அசஸ்மென்ட் மதிப்பெண் வழங்கும்போது இந்த 4 மதிப்பெண்ணை வழங்குவோம். நாங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கிடையாது. வாக்களிக்க வேண்டும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். வாக்களித்த பின்னர் பெற்றோரை மாணவர்கள் பள்ளிக்கும் அழைத்து வரலாம். குலுக்கல் முறையில் பரிசும் வழங்கப்படும். இந்தக் கழகத்தில் 3,000 பள்ளிகள் உள்ளன. இந்த திட்டம் அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றப்பட உள்ளது என்றார்.
Related Tags :
Next Story