மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நீதிபதி ராமலிங்கம் சுதாகர் நியமனம்: தமிழ்நாட்டை சேர்ந்தவர்


மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நீதிபதி ராமலிங்கம் சுதாகர் நியமனம்: தமிழ்நாட்டை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 11 May 2018 11:30 PM GMT (Updated: 11 May 2018 8:47 PM GMT)

மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி ராமலிங்கம் சுதாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், பணப்பாக்கத்தை சேர்ந்தவர் நீதிபதி ராமலிங்கம் சுதாகர். இவர் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக 2005-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர் 2007-ம் ஆண்டு, ஏப்ரல் 20-ந் தேதி நிரந்தர நீதிபதி ஆனார்.

இவர், காஷ்மீர் ஐகோர்ட்டு நீதிபதியாக 2016-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந் தேதி மாற்றப்பட்டார். அங்கு தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பணி ஆற்றி வந்தார். இந்த நிலையில், அவர் மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதேபோன்று காஷ்மீர் ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்து வந்த முகமது யாகூப் மிர், மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

காஷ்மீர் ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி அலோக் அராதே, அதே கோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவுகளை மத்திய சட்ட அமைச்சகம் பிறப்பித்து உள்ளது.

Next Story