சரக்கு, சேவை வரி வரம்பில் இயற்கை எரிவாயு? ஜி.எஸ்.டி. கவுன்சில் விவாதிக்கிறது


சரக்கு, சேவை வரி வரம்பில் இயற்கை எரிவாயு? ஜி.எஸ்.டி. கவுன்சில் விவாதிக்கிறது
x
தினத்தந்தி 8 Jun 2018 10:30 PM GMT (Updated: 8 Jun 2018 6:59 PM GMT)

சரக்கு, சேவை வரி வரம்பில் இயற்கை எரிவாயுகளை கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் விவாதித்து வருகிறது.

புதுடெல்லி, 

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு வரம்புக்குள் மண்எண்ணெய், நாப்தா, சமையல் எரிவாயு ஆகியவை உள்ளன.

பிற பெட்ரோலியப் பொருட்களான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ஏ.டி.எப். என்னும் விமான எரிபொருள், பெட்ரோல், டீசல் ஆகியவை சரக்கு, சேவை வரி விதிப்புக்கு வெளியே வைக்கப்பட்டு உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிற நிலையில், அவற்றையும் சரக்கு, சேவை வரி வரம்பின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சூழலில் சரக்கு, சேவை வரி வரம்பின்கீழ், சோதனை அடிப்படையில் இயற்கை எரி வாயுவை கொண்டு வருவது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக, அந்த கவுன்சிலின் இணைச்செயலாளர் தீரஜ் ரஸ்தோகி தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், “ஏ.டி.எப். என்னும் விமான எரிபொருளையும் சரக்கு, சேவை வரி வரம்பின்கீழ் 5 பெட்ரோலியப் பொருட்களுடன் கொண்டு வர முடியும்” என தெரிவித்தார்.

அதே நேரத்தில் இதற்கான காலக்கெடு எதையும் அவர் குறிப்பிடவில்லை.

Next Story