கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 July 2018 3:52 PM GMT (Updated: 16 July 2018 3:52 PM GMT)

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


மண்டியா, 

கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் செல்கிறது. 

கர்நாடகத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கர்நாடக கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மழை தீவிரம் அடைந்தது. இதேப்போல காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் உள்ள தலைக்காவிரி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. 

இந்த மழை காரணமாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்து உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்) அணையில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதுபோல் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இதனால் இரு அணைகளில் இருந்தும் கடந்த ஒரு வாரமாக 20 ஆயிரம், 30 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. அணைகளுக்கு அதிகளவு நீர் வருவதால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து நேற்று 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 277 கனஅடி நீர் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.  கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story