காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து கர்நாடக எம்.பி.க்களுடன் குமாரசாமி டெல்லியில் இன்று ஆலோசனை


காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து கர்நாடக எம்.பி.க்களுடன் குமாரசாமி டெல்லியில் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 17 July 2018 11:45 PM GMT (Updated: 17 July 2018 11:34 PM GMT)

காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி, கர்நாடக எம்.பி.க்களுடன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். எம்.பி.க்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், 2 உறுப்பினர்களை கர்நாடக அரசு நியமித்தது. இந்த ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து, அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்துகொள்ளுமாறு கர்நாடகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க் களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அழைப்பிதழுடன் அனைத்துக்கட்சி எம்.பி.க்களுக்கும் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் (ஐபோன்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். கர்நாடக எம்.பி.க்களின் கூட்டத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு கர்நாடக பவனில் தங்கும் அவர், நாளை (வியாழக்கிழமை) காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பெங்களூரு வந்தடைகிறார்.

முன்னதாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த குமாரசாமி, “கர்நாடக எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அழைப்பிதழுடன் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போன் பரிசாக வழங்கியதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு செல்போன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. செல்போன் வழங்கப்பட்டு இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி நான் விசாரிக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே கர்நாடக எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை தான் வழங்கியதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். தனிப்பட்ட முறையில் தன்னுடைய சொந்த செலவில் எம்.பி.க் களுக்கு செல்போனை பரிசாக வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

பா.ஜனதா எம்.பி. ராஜீவ் சந்திரசேகர், ‘அரசின் வீண் செலவுகளை குறைப்பதாக சொல்லும் நீங்கள் எம்.பி.க் களுக்கு விலை உயர்ந்த செல்போனை பரிசாக வழங்கியிருப்பது சரியா? துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசால் சம்பளம் வழங்க முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் நான் அரசு வழங்கியுள்ள செல்போனை ஏற்காமல் திருப்பி அனுப்புகிறேன்’ என்று குமாரசாமிக்கு கடிதம் எழுதி செல்போனை திருப்பி அனுப்பினார்.

Next Story