கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது - ராஜ்நாத் சிங்


கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 12 Aug 2018 1:12 PM GMT (Updated: 12 Aug 2018 1:12 PM GMT)

கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #KeralaFloods



கொச்சி,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் அணைகளையொட்டிய தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். மழையினால் வீடு, வாசல்களை இழந்த 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வெள்ளத்தினால் 37 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோரும் பார்வையிட்டார். இடுக்கி அணையில் நீர் குறைந்தது காரணமாக அச்சம் குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வது மீட்பு பணியில் தொய்வை ஏற்படுத்துகிறது. கொச்சியில் பாதிப்பு தொடர்பாக முதல்-மந்திரி பினராய் விஜயனுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனையை மேற்கொண்டார். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்து உள்ளது என பினராய் விஜயன் கூறியுள்ளார். 

இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட ராஜ்நாத் சிங் பேசுகையில், கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது,” என்றார். 


Next Story