14-வது நாளாக எட்டிய உண்ணாவிரதம் உடல்நிலை மோசமானதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஹர்திக் பட்டேல்


14-வது நாளாக எட்டிய உண்ணாவிரதம்  உடல்நிலை மோசமானதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஹர்திக் பட்டேல்
x
தினத்தந்தி 7 Sep 2018 11:27 AM GMT (Updated: 7 Sep 2018 11:27 AM GMT)

14-வது நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹர்திக் பட்டேல் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #HardikPatel

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் சிறுபான்மை இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் தொடர்பாக வெடித்த வன்முறைக்கு 14 பேர் உயிரிழந்தனர்.

அந்த போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஆகஸ்ட் 25-ம் தேதி  அந்த இயக்கத்தின் சார்பில் குஜராத்தில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

இதைதொடர்ந்து, அகமதாபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டு வளாகத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை 3 மணியளவில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஹர்திக் பட்டேல் தொடங்கினார்.

இந்தநிலையில்,  அவரது போராட்டம் இன்று 14-வது நாளாக நீடித்தது.  இதுவரை அவர் சாப்பிடாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

ஹர்திக் பட்டேல் உடல்நிலை நேற்றே மோசமடைந்தது. அவருக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர்.  இதனால் அரசு அவசர ஆலோசனை நடத்தியது. 

இதில் பட்டேல் சமூக மந்திரிகள் மற்றும் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அரசு ஹர்திக் பட்டேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். எனவே, அவருடன் அரசு சார்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story