உத்தர பிரதேசத்தில் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி கைது; கோவில் மீது நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு


உத்தர பிரதேசத்தில் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி கைது; கோவில் மீது நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2018 1:28 PM GMT (Updated: 13 Sep 2018 1:28 PM GMT)

உத்தர பிரதேசத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாதி இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

லக்னோ,

நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில், ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினை சேர்ந்த தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்த உள்ளனர் என தீவிரவாத ஒழிப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து கான்பூர் நகரின் சகேரி பகுதியில் குவாமர் உஜ் ஜமா (வயது 37) என்ற நபரை தீவிரவாத ஒழிப்பு படையினர் இன்று கைது செய்தனர்.  அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் அசாமை சேர்ந்தவர் என்பதும் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர் என்பதும் தெரிய வந்துள்ளது.

விநாயக சதுர்த்தியான இன்று மாநிலத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கைதுக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பினை அவசர கதியில் நடத்திய டி.ஜி.பி. ஓ.பி. சிங், மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் குவாமர் பயிற்சி பெற்றுள்ளார்.  குவாமரிடம் இருந்து மொபைல் போன் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அதில் கான்பூர் நகரில் உள்ள கோவில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது பற்றிய வீடியோ ஒன்று கிடைத்துள்ளது.

தேசிய புலனாய்வு கழகத்தின் தகவலின் அடிப்படையில் குவாமரை கைது செய்துள்ளோம்.  கோவிலுக்கு பெருமளவிலான பொதுமக்கள் சென்ற நிலையில் தீவிரவாதி தனது திட்டத்தினை வெற்றிகரமுடன் நிறைவேற்றி இருந்தால் அது மிக பெரிய தாக்குதலாக அமைந்திருக்கும் என்று அவர் கூறினார்.



Next Story