சபரிமலைக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு; பாதுகாப்பு ஏற்பாடுகளில் கேரள அரசு தீவிரம்


சபரிமலைக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு; பாதுகாப்பு ஏற்பாடுகளில் கேரள அரசு தீவிரம்
x
தினத்தந்தி 9 Nov 2018 4:01 PM GMT (Updated: 9 Nov 2018 4:01 PM GMT)

மண்டல பூஜையின் போது சபரிமலைக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்.


திருவனந்தபுரம்,


சபரிமலை அய்யப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இன்றி பெண்கள் உள்பட அனைத்து பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சென்று வழிபட நீண்ட காலமாக தடை இருந்து வந்தது. இதனால் அந்த வயதில் உள்ள பெண்கள் அங்கு செல்வது இல்லை. இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது. 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்காமல் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 5-ம் தேதி சிறப்பு பூஜைக்காக கோவில் திறக்கப்பட்ட போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக வருகிற 16–ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது கேரளா மட்டும் அல்லாமல் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் தரிசனத்துக்காக வருவார்கள். கேரள போலீஸ் சார்பில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த  மண்டல, மகரவிளக்கு பூஜையில் கலந்துகொள்ள இதுவரை 3½ லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அப்போது தரிசனம் செய்வதற்காக 539 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இந்த பெண்கள் அனைவரும் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே போராட்டம் தொடரும் நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம் சபரிமலையில் போராட்டம் நடைபெற்ற போது ஐகோர்ட்டில் போலீஸ் தாக்கல் செய்த அறிக்கையில், சபரிமலையில் இதேபோன்ற நிலை தொடர்ந்தால் உயிரிழப்பு நேரிட வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. 

Next Story