17-ம் தேதி சபரிமலைக்கு செல்வது உறுதி அசம்பாவிதம் நிகழ்ந்தால் முதல்-மந்திரி, டிஜிபி தான் பொறுப்பு - திருப்தி தேசாய்


17-ம் தேதி சபரிமலைக்கு செல்வது உறுதி அசம்பாவிதம் நிகழ்ந்தால் முதல்-மந்திரி, டிஜிபி தான் பொறுப்பு - திருப்தி தேசாய்
x
தினத்தந்தி 15 Nov 2018 10:16 AM GMT (Updated: 15 Nov 2018 10:28 AM GMT)

17-ம் தேதி சபரிமலைக்கு செல்வது உறுதி. எனது உயிருக்கு எந்தவித அசம்பாவிதம் நிகழ்ந்தால் முதல்-மந்திரி, டிஜிபி தான் பொறுப்பு என்று திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நீதிபதிகள் அமர்வு, அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் தரப்பில் 48 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக நவம்பர்-16 ம் தேதி நாளை  சபரிமலை அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட உள்ளது. 

இந்நிலையில், வரும் 17-ம் தேதி திட்டமிட்டப்படி சபரிமலை கோயிலுக்குள் நுழைவேன் என்று மராட்டியத்தை சேர்ந்த திருப்தி தேசாய் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், தன்னுடன் மேலும் 5 பெண்கள் வரவிருப்பதாகவும், அவர்கள் அனைவருமே தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள்தான் என்றும் கூறினார். அய்யப்பனை தரிசிக்காமல் ஊர் திரும்ப மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

"சபரிமலைக்கு நாங்கள் வரும் அன்றைய தினம் கேரள அரசு எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இ-மெயில் மூலம் கடிதம் ஒன்றினை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அனுப்பி உள்ளேன். அந்த கடிதத்தில் தாங்கள் சாமி தரிசனம் முடிந்து கேரளாவில் இருந்து செல்லும் வரை தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன்.

மேலும் பிரதமருக்கும் இது தொடர்பான பாதுகாப்பு கேட்டு கடிதம் இ-மெயில் மூலம் அனுப்பி உள்ளேன். எப்படி இருந்தாலும் சரி வரும் சனிக்கிழமை கோயிலுக்குள் கண்டிப்பாக செல்வோம். எனது உயிருக்கு எந்தவித அசம்பாவிதம் நிகழ்ந்தால்  முதல்-மந்திரி பினராயி விஜயன். கேரள டிஜிபி தான் பொறுப்பு என்று கூறியுள்ளார். இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் எனக்கு வரவில்லை.  என்று கூறியுள்ளார். 

இதையடுத்து கேரள அரசும் திருப்தி தேசாயின் கடிதம் கிடைத்திருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story