வேதாரண்யத்தில் தொடரும் துயரம் நிவாரண முகாம்களில் குவியும் மக்கள்; மழையால் சீரமைப்பு பணி பாதிப்பு


வேதாரண்யத்தில் தொடரும் துயரம் நிவாரண முகாம்களில் குவியும் மக்கள்; மழையால் சீரமைப்பு பணி பாதிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2018 1:54 PM GMT (Updated: 20 Nov 2018 1:54 PM GMT)

வேதாரண்யத்தில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் மக்கள் குவிந்து வருகிறார்கள். குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.


வேதாரண்யம், 


நாகை மாவட்டம் வேதாரண்யத்தை ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டுள்ளது. வீடுகள், தோட்டங்களை இழந்து விட்ட மக்களுக்காக வேதாரண்யம் பகுதியில் 60–க்கும் மேற்பட்ட புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில் குடும்பம், குடும்பமாக குவியும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எவ்வளவு உணவு தயாரித்தாலும், குடிநீர் வினியோகத்தாலும் பற்றாக்குறையே நீடிக்கிறது. பல முகாம்களில் குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கடைகள் திறக்கப்படாததால் அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கு அரசை மட்டுமே மக்கள் நம்பி இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

‘‘எங்கள் பகுதிக்கு அதிகாரிகள் வரவில்லை, நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை’’ என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.   

 சீரமைப்பு பணி பாதிப்பு 

புயலால் முற்றிலும் உருக்குலைந்து விட்ட வேதாரண்யம் பகுதியில் மின்கம்பங்களை சீரமைத்தல், முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு பணியாளர்கள் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் வேதாரண்யத்தில் காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. மழை பெய்து கொண்டே இருந்ததால் மின்கம்பங்கள் சீரமைப்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு 60–க்கும் மேற்பட்ட கிராமங்கள் 6–வது நாளாக இருளில் மூழ்கியுள்ளன. மழை மின்சாரம் வருவதை மேலும் தாமதப்படுத்தும் என்பதால் மக்கள் கவலையில் உள்ளனர்.


Next Story