ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 26 Nov 2018 11:58 AM GMT (Updated: 26 Nov 2018 11:58 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.  மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில்  மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த சுப்ரீம்கோர்ட் , ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  தற்போது சுப்ரீம் கோர்ட் தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

Next Story