அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்: டெல்லியில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் - பா.ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக போட்டியிட முக்கிய ஆலோசனை


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்: டெல்லியில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் - பா.ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக போட்டியிட முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 9 Dec 2018 11:30 PM GMT (Updated: 9 Dec 2018 8:29 PM GMT)

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக போட்டியிடுவது பற்றி டெல்லியில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி, முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணிக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களையும் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி உள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார். இதில் கலந்து கொள்ளுமாறு தேசிய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், மாநில கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், லோக்தந்திரிக் ஜனதாதள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஷ் சந்திரமிஷ்ரா கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பஞ்சாப் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோரும் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

5 மாநில சட்டசபை தேர்தல்கள் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிற ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்றும், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 2 மாநிலங்களிலும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே இழுபறி நிலை ஏற்படக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.

இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாது பிற எதிர்க்கட்சிகளுக்கும் புதிய நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.

இந்த தருணத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்க் கட்சிகள் அனைத்தும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஓரணியாக இணைந்து நின்று சந்திப்பதற்கான வியூகம் அமைப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story