ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்மொழிவால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்


ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் முன்மொழிவால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்
x
தினத்தந்தி 19 Dec 2018 9:34 AM GMT (Updated: 19 Dec 2018 9:34 AM GMT)

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி முன்மொழியப்பட்டதால் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழற்றி விடப்பட்டு உள்ளது.

லக்னோ,

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கார் ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று காங்கிரஸ்  ஆட்சி அமைத்து உள்ளது. இந்த மூன்று மாநில தேர்தல்களின் வெற்றி காங்கிரசுக்கு தெம்பை அளித்து உள்ளது.  இதனால்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டு உள்ளது. 

இதன் முன்னோட்டமாக  சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில்  பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்  நாம் டெல்லியில் புதிய பிரதமரை அமர வைப்போம். புதிய இந்தியாவை உருவாக்குவோம். கருணாநிதியின் மகனாக தமிழகத்தில் இருந்து இப்போது ராகுல்காந்தி பெயரை நான் முன்மொழிகிறேன். ராகுல்காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சியை தருக. பாசிச, நாசிச மோடி அரசை வீழ்த்துவோம். ராகுல்காந்திக்கு அந்த வல்லமை இருக்கிறது. ராகுல்காந்தியின் கரங்களை அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்துவோம். நாட்டை காப்பாற்றுவோம், ஜனநாயக தீபத்தை ஏற்றுவோம் என்று உங்களுடன் சேர்ந்து கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நானும் உறுதி எடுத்துக் கொள்கிறேன் என கூறினார்

மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்பு  கூட்டணி கட்சி தலைவர்களிடத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க அமைச்சருமான சுப்ரதா முகர்ஜி  கூறியதாவது:-

பாஜகவை தோற்கடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்வது மட்டுமே இப்போதைக்கு எங்களது முடிவாகும். அதனை நாங்கள் தனியாகவே செய்வோம். மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைவருடனும் ஆலோசித்து முடிவு செய்வோம் என்றார் சுப்ரதா முகர்ஜி.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.

இது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்  கூறுகையில், மு.க. ஸ்டாலின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. கூட்டணி கட்சிகளின் கருத்து இல்லை. தனி ஒருவரின் கருத்து கூட்டணியின் கருத்து ஆக முடியாது. தற்போது நடந்து வரும் பா.ஜ., ஆட்சி வெளியேற்றப்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதற்காக தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,விற்கு எதிரான கூட்டணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங். தலைவர் சரத் பவார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என அனைவரும் முயற்சி செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தரபிரதேசத்தில் வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி இடையே முடிவாகி விட்டது இந்த இரு கட்சிகளும் தங்களுக்குள்  இடஒதுக்கீடுகளை முடிவு செய்து விட்டன. இந்த கூட்டணியில் அந்த இரு கட்சிகளும்  காங்கிரசை சேர்த்து கொள்ளவில்லை. காங்கிரசை கழற்றி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு கட்சிகளும் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில்  அங்கு சரிசம இடங்களில் போட்டியிட போகின்றன. உத்தரபிரதேச மேற்கில்  ராஷ்ட்ரீய லோக் தள கட்சி  (RLD) அதன் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும். இதற்கான அறிவிப்பு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது  பிறந்த நாளான ஜனவரி 15-ந்தேதி அறிவிப்பார் என கூறப்படுகிறது.

Next Story