அயோத்தியில் நிலம் ஒப்படைப்பு பா.ஜனதாவின் தேர்தல் தந்திரம் - மாயாவதி குற்றச்சாட்டு


அயோத்தியில் நிலம் ஒப்படைப்பு பா.ஜனதாவின் தேர்தல் தந்திரம் - மாயாவதி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Jan 2019 1:56 PM GMT (Updated: 30 Jan 2019 1:56 PM GMT)

அயோத்தியில் நிலம் ஒப்படைப்பு பா.ஜனதாவின் தேர்தல் தந்திரம் என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

1991–ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அயோத்தியில் பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றிலும் உள்ள 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.

இதில் ராமஜென்ம பூமி நியாஸ் என்ற ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட இந்து அறக்கட்டளை தனக்கு சொந்தமான 42 ஏக்கர் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டு விண்ணப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிலும் இதுதொடர்பாக அந்த அமைப்பு விண்ணப்பித்துள்ளது. எனவே கூடுதலாக கையகப்படுத்திய நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கலாம் என்ற முடிவை மத்திய அரசு முக்கிய கொள்கை முடிவாக எடுத்துள்ளது.

அயோத்தியில் கூடுதலாக கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

 இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி  பேசுகையில்,  உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைத்ததால், இனிமேல் ஆட்சிக்கு வர முடியாது என்று பா.ஜனதா உணர்ந்து கொண்டது. எனவே, விரக்தியின் வெளிப்பாடாக இம்முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், கெட்ட பெயர் எடுத்துள்ளது. எனவே, நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு பெற கடைசி ஆயுதமாக மத அரசியலை கையில் எடுத்துள்ளது. இது, பா.ஜனதாவின் தேர்தல் நேர தந்திரம். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார். 

Next Story