தீதி, தயவு செய்து சிரியுங்கள்: மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து டெல்லி முழுவதும்போஸ்டர்


தீதி, தயவு செய்து சிரியுங்கள்: மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து டெல்லி முழுவதும்போஸ்டர்
x
தினத்தந்தி 13 Feb 2019 6:59 AM GMT (Updated: 13 Feb 2019 6:59 AM GMT)

தீதி, தயவு செய்து சிரியுங்கள், எங்கிருக்கிறது ஜனநாயகம் என டெல்லி முழுவதும் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகிறார்கள்.

 கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளை திரட்டி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார்.

இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு, டெல்லி முதல்- மந்திரி கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் சிங்வி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தது.

இதற்கிடையே ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்கிறார். அவர் ஏற்கனவே மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இன்று கெஜ்ரிவால் கூட்டியுள்ள பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். இதற்காக கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார்.

டெல்லி முழுவதும் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. போஸ்டரில்  தீதி, தயவு செய்து சிரியுங்கள், டெல்லிக்கு வரவேற்கிறோம், எங்கே ஜனநாயகம்  உயிருடன் இருக்கிறது  மற்றும் உதைபடுகிறது தீதி  என  ஜனநாயகத்திற்கான இளைஞர்கள் என்ற அமைப்பால் ஒட்டப்பட்டு உள்ளது.

நகரின் பல இடங்களில்  மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. ஜந்தர் மந்தர் சாலை, பேங் பவன் (ஹாலி ரோடு) மற்றும் வின்ட்சர் பேலஸ் பகுதி ஆகியவற்றில் அவை ஒட்டப்பட்டு உள்ளன.

Next Story