இந்திய விமானப்படையின் லிப்ட் ஹெலிகாப்டர் அறிமுகம்


இந்திய விமானப்படையின் லிப்ட் ஹெலிகாப்டர் அறிமுகம்
x
தினத்தந்தி 25 March 2019 7:35 AM GMT (Updated: 25 March 2019 7:35 AM GMT)

இந்திய விமானப்படையின் லிப்ட் ஹெலிகாப்டர் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

சண்டிகர்,

இந்திய விமானப்படை வாங்கியுள்ள 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் 4 ஹெலிகாப்டர்களை மக்களின் பார்வைக்கு இன்று அறிமுகம் செய்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டு சுமார் 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவிடம் இருந்து 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களில் முதல் நான்கு ஹெலிகாப்டர்கள் தற்போது இந்தியா வந்துள்ளது.

சண்டிகரில்  இந்திய விமானப்படை (IAF) அதன் 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் நான்கு ஹெலிகாப்டர்களை மக்களின் பார்வைக்கு இன்று அறிமுகம் செய்தது. பன்முக திறமை கொண்ட இந்த லிப்ட் ஹெலிகாப்டர்கள் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சினைகளின் போது இந்திய விமானப் படைகளின் பலத்தை அதிகரிக்க பயன்படும் என கூறப்படுகிறது.

சண்டிகரின் விமானப்படை நிலையம் விங் 12 விமான நிலையத்தில் இன்று இந்த முதல் நான்கு லிப்ட் ஹெலிகாப்டர்களை விமானப்படைத் தளபதி மார்சல் பி.எஸ். தானோ அறிமுகம் செய்தார். 

அறிமுக நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது:-

"நாடு பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. ஒரு பல்வகைப்பட்ட திறன் நமக்கு தேவைப்படுகிறது. இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் குறிப்பிட்ட மேம்பாடுகளை கொண்டு வாங்கப்பட்டுள்ளது. இது நம் தேசிய சொத்து" என கூறினார்.

கடந்த மாதம் குஜராத்தின் முந்திரா போர்ட் வந்தடைந்த இந்த லிப்ட் ஹெலிகாப்டர்கள், பின்னர் சண்டிகர் இடமாற்றம் செய்யப்பட்டதாக  விமானப்படை தளபதி மார்சல் பி.எஸ். தானோ தெரிவித்துள்ளார்.

இந்த லிப்ட் ஹெலிகாப்டர்கள் சுமார் 23,000 கிலோ எடையினை தாங்கி மணிக்கு சுமார் 302 கிமீ வேகத்தில் பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள உலக நாடுகளில் இந்தியா தற்போது 19-வது இடம் பிடித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story