சிறுமியை கற்பழித்த 79 வயது முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கற்பழித்த 79 வயது முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 29 March 2019 10:29 PM GMT (Updated: 29 March 2019 10:29 PM GMT)

சிறுமியை கற்பழித்த 79 வயது முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

மும்பை டிராம்பே பகுதியை சேர்ந்த முதியவர் அலாவுதீன் செய்யது (வயது79). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந் தேதி அந்த பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்து உள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள். இதுபற்றி அவளிடம் தாய் விசாரித்தபோது, முதியவர் தன்னை கற்பழித்தது பற்றி கூறினாள்.

இதனால் பதறிப்போன சிறுமியின் தாய் இதுகுறித்து டிராம்பே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலாவுதீன் செய்யதுவை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் மும்பை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது, அலாவுதீன் செய்யதுவின் தரப்பில் வேண்டுமென்றே தன்னை சிக்க வைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு, குற்றவாளி அலாவுதீன் செய்யதுவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Next Story