41 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த வகுப்பறையில் வாக்குப்பதிவு செய்த நடிகர் பிரகாஷ்ராஜ்


41 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த வகுப்பறையில் வாக்குப்பதிவு செய்த நடிகர் பிரகாஷ்ராஜ்
x
தினத்தந்தி 18 April 2019 9:35 PM GMT (Updated: 18 April 2019 9:35 PM GMT)

நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக 12 மாநிலங்களில் 95 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் கவனத்தை ஈர்த்த அம்சங்கள் பார்க்கலாம்.

புதுடெல்லி,

* பெங்களூருவில் ஜெயாநகர் பி.இ.எஸ். கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்ய வந்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தேர்தல் ஏற்பாடுகள் தாமதமானதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்து நின்று ஓட்டுப்பதிவு செய்தார்.

* பெங்களூரு மத்தி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், தான் 41 ஆண்டுகளுக்கு முன் படித்த பெங்களூரு செயின்ட் ஜோசப் பள்ளி வகுப்பறையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். இதை அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

* கர்நாடகத்தில் தட்சிண கன்னட மாவட்டத்தில் உர்லண்டி என்ற இடத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வாக்களிக்க வந்தபோது, பிரசவ வலி ஏற்பட்டது. அவர் ஓட்டுப்பதிவு செய்து முடித்தவுடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

* காஷ்மீரில் உதம்பூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு புதுமண தம்பதியர் மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர். கர்நாடக மாநிலம் உடுப்பியில் திருமணத்துக்கு முன்னதாக ஒரு ஜோடி வந்து வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினர்.

* மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர் பிரணவ் பாட்டீல் என்பவர் விதிகளை மீறி, தான் ஓட்டுப்பதிவு செய்ததை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பி சர்ச்சைக்கு ஆளானார். அவர் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* ஒடிசாவில் அஸ்கா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சனாகேமுண்டி சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவு செய்ய வந்த 95 வயது முதியவர் ஒருவர் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது மயங்கிச்சரிந்து உயிரிழந்தார்.

* கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாந்தமூர்த்தி என்ற அதிகாரி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

* மராட்டிய மாநிலம், லாத்தூரில் கபாய்பய் கணபதி காம்பிளே என்ற 105 வயது மூதாட்டி, குழந்தைகள், பேரக்குழந்தைகள் துணையுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்து ஓட்டுப்பதிவு செய்தார்.

* ‘பத்ம’ விருது பெற்ற 107 வயதான சாலுமராதா திம்மக்கா பெங்களூரு ஊரக தொகுதியில் வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

Next Story