மத்திய பிரதேச மக்களவை தேர்தல் பணிக்காக வந்த 3 ஊழியர்கள் உயிரிழப்பு


மத்திய பிரதேச மக்களவை தேர்தல் பணிக்காக வந்த 3 ஊழியர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 29 April 2019 10:00 AM GMT (Updated: 29 April 2019 10:00 AM GMT)

மத்திய பிரதேசத்தில் மக்களவை தேர்தல் பணிக்காக வந்த 3 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 4வது கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது.  இதில், மத்திய பிரதேசத்தில் சித்தி, ஷாடோல், ஜபல்பூர், மண்ட்லா, பாலக்காட் மற்றும் சிந்த்வாரா ஆகிய 6 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.  இதனுடன் சிந்த்வாரா தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.  இதில் முதல் மந்திரி கமல் நாத் போட்டியிடுகிறார்.

தேர்தல் பணிகளுக்காக அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் சுனந்தா கொட்டேகர் (வயது 50) என்பவர் சிந்த்வாரா மக்களவை தொகுதிக்காக சான்சார் பகுதியில் உள்ள லோதிகேடா வாக்கு மையத்திற்கு நேற்று வந்துள்ளார்.  அவருடன் மற்ற அதிகாரிகளும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவு அவருக்கு உடல்நிலை மோசமடைந்து உள்ளது.  ஆனால் அவர் மருத்துவ உதவி வழங்குவதற்கு முன்பே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.

இதேபோன்று பாலக்காட் மக்களவை தொகுதிக்காக சியோனி பகுதியில் பணியமர்த்தப்பட்ட தேர்தல் பணியாளர் ஒருவர் நேற்று மாலை மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவால் உயிரிழந்து விட்டார்.  மற்றொரு சம்பவத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சித்தி மாவட்டத்திற்கு இன்று காலை வந்த உதவி ஆய்வாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.

Next Story