பிரதமர் மோடிக்கு என்னிடமிருப்பது அன்புமட்டும்தான் - ராகுல் காந்தி


பிரதமர் மோடிக்கு என்னிடமிருப்பது அன்புமட்டும்தான் - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 6 May 2019 3:26 PM GMT (Updated: 6 May 2019 3:26 PM GMT)

பிரதமர் மோடி என்னுடைய குடும்பத்தை எவ்வளவு வெறுக்கிறார் என்பது பிரச்சனை கிடையாது, என்னிடம் அவருக்கு இருப்பது அன்புமட்டும்தான் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கி பேசி வருகின்றனர். இதில் சமீபத்திய நிகழ்வாக, ராகுல் காந்தியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி குறித்து சில கருத்துகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருந்தார்.

உத்தரபிரதேசத்தில் நேற்று முன்தினம் நடந்த பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசும்போது, ‘உங்கள் தந்தை (ராஜீவ் காந்தி) கறைபடியா கரத்துக்கு சொந்தக்காரர் (மிஸ்டர் கிளீன்) என அவரது சேவகர்களால் கருதப்பட்டார். ஆனால் அவரது வாழ்க்கையோ ‘ஊழல் நம்பர் ஒன்று’ என்ற நிலையில்தான் முடிந்தது’ என்று கூறினார். கடந்த 1980–களில் பரபரப்பாக பேசப்பட்ட போபர்ஸ் ஊழலில் ராஜீவ் காந்தியை தொடர்புபடுத்தி பிரதமர் மோடி இவ்வாறு பேசி இருந்தார்.
 
தனது தந்தை குறித்த மோடியின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தி நேற்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மோடிஜி, போர் முடிந்துவிட்டது. உங்கள் கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. எனது தந்தை பற்றிய உங்களின் உள்ளார்ந்த உணர்வுகள் ஒருபோதும் உங்களை பாதுகாக்காது. உங்களுக்கு எனது அன்பும், மிகப்பெரிய அரவணைப்பும்... ’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல ராகுல் காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காவும் மோடிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘தியாகிகளின் பெயரால் ஓட்டு கேட்கும் மோடி, அவர்களது நினைவை அவமதித்து வருகிறார். நேர்மையான, அப்பாவியான ஒருவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் அவரது தியாகத்தை அவமதித்து உள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு ராஜீவ் காந்தியின் அமேதி தொகுதி மக்கள் பதிலடி கொடுப்பார்கள். ஆம். மோடிஜி, மோசடிக்காரர்களை இந்த நாடு மன்னிக்காது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையே ராஜீவ் காந்தி பற்றிய பிரதமர் மோடியின் கருத்து காங்கிரசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். போபர்ஸ் ஊழலில் ராஜீவ் காந்திக்கு எதிராக ஆதாரம் இல்லை என ஐகோர்ட்டே கூறிய பிறகும், பிரதமர் மோடி இவ்வாறு கூறுவது கண்டனத்துக்குரியது என அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியை பிரதமர் மோடி அவமதித்துள்ளார்; பிரதமர் மோடி என்னுடைய தந்தையையும், எங்களுடைய குடும்பத்தையும் எவ்வளவு வெறுக்கிறார் என்பது பிரச்சனை கிடையாது. எப்போதுமே அவருக்கு என்னிடம் இருப்பது மற்றும் கொடுப்பது அன்புமட்டும்தான்,” என கூறியுள்ளார். 

Next Story