பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை : அமித் ஷா சொல்கிறார்


பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை : அமித் ஷா சொல்கிறார்
x
தினத்தந்தி 13 Jun 2019 11:45 PM GMT (Updated: 13 Jun 2019 10:45 PM GMT)

303 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

மாநில பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா கலந்துகொண்டு, நிர்வாகிகளிடையே பேசினார்.

அப்போது அவர், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. இருந்தாலும், பா.ஜனதா தனது வெற்றியின் உச்சத்தை இன்னும் தொடவில்லை. கட்சியின் அங்கமாக இல்லாத, கட்சியின் நலத்திட்டங்களை அனுபவிக்காத அனைத்து தரப்பு மக்களையும் எட்டும்வகையில் பா.ஜனதாவினர் இன்னும் கடுமையாக பணியாற்ற வேண்டும்’’ என்று பேசினார்.

பா.ஜனதா புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை அமித் ஷா தொடங்கிவைத்தார். உறுப்பினர் சேர்க்கையை கண்காணிக்கும் குழுவின் அமைப்பாளராக முன்னாள் முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகானை நியமித்தார்.

டிசம்பர் மாதம்வரை, பா.ஜனதா தலைவராக அமித் ஷா நீடிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்துக்கு பிறகு, பா.ஜனதா பொதுச்செயலாளர் புபேந்தர் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

பிரதமர் மோடியின் தலைமைக்காகவும், மத்திய அரசின் சிறந்த செயல்பாட்டுக்காகவும், கட்சி ஊழியர்களின் கடும் உழைப்புக்காகவும் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

16 மாநிலங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட ஓட்டுகளை பா.ஜனதா பெற்றுள்ளது. 200 தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி வித்தியாசம் அதிகமாக உள்ளது. இந்த தேர்தலில் சாதியமும், குடும்ப அரசியலும் வீழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2014–ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பிறகும், பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை என்று அமித் ஷா கூறினார். இப்போதும் அதையே கூறியுள்ளார்.

கடந்த 2014–ம் ஆண்டுக்கு பிறகு, பா.ஜனதா உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 கோடியாக அதிகரித்தது. இப்போது, புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story