மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் கிரண்பெடியின் அப்பீல் மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் கிரண்பெடியின் அப்பீல் மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 10:07 PM GMT)

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளதாக, கவர்னர் கிரண்பெடி அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

புதுச்சேரியில், மாநில அரசின் அதிகாரங்களை துணைநிலை கவர்னர் கிரண்பெடி கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும், அவரது ஒட்டுமொத்த செயல்பாடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இருப்பதாகவும் கூறி, ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பெடிக்கு சிறப்பு அதிகாரம் இல்லை எனவும், அவர் மந்திரிசபை முடிவு அடிப் படையில்தான் செயல்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் சார்பிலும், கிரண்பெடி சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை மே 10-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்ததுடன், எதிர்மனுதாரரான கே.லட்சுமிநாராயணன் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறி புதுச்சேரி கவர்னர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சை அணுகுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

Next Story