கோசாலையில் பராமரிக்கப்பட்ட 45 பசுக்கள் பரிதாப சாவு


கோசாலையில் பராமரிக்கப்பட்ட 45 பசுக்கள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 17 July 2019 7:45 PM GMT (Updated: 17 July 2019 7:16 PM GMT)

கோசாலையில் பராமரிக்கப்பட்ட 45 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

அகர்தலா,

திரிபுரா மாநிலம், சிபாகிஜாலா மாவட்டம், தேவிபூரில் தேசிய தொண்டு நிறுவனத்தால் அரசு வழங்கிய 4 ஏக்கர் நிலத்தில் கோசாலை நடத்தப்பட்டு வருகிறது. பசு கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்படும் பசுக்கள் அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நமது அண்டை நாடான வங்காளதேசத்திற்கு கடத்தப்பட இருந்த பசுக்கள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் மீட்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன. கோசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக பசுக்கள் வெட்ட வெளியில் விடப்பட்டு இருக்கின்றன. கடந்த 6 நாட்களாக இடைவிடாது பெய்த கனமழையில் நனைந்த 45 பசுக்கள் காய்ச்சல் (ஹைபர்தெர்மியா) காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துவிட்டன.

இதுகுறித்து கோசாலையின் பொறுப்பாளர் ஜோஷைன் அந்தோணி கூறுகையில், தற்போது 700 பசுக்கள் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. “இடப்பற்றாக் குறையாலேயே அந்த 45 பசுக்களும் மழையில் நனைந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டன” என்றார்.

இதுகுறித்து, விலங்குகள் நலன் வளர்ச்சித்துறை இயக்குனர் டாக்டர் திலிப் கே.ஆர் சக்மா கூறுகையில், நாங்கள் அந்த தொண்டு நிறுவனத்திடம் இருந்து பசுக்களுக்கு தீவனம் கொடுக்கப்பட்டது குறித்து முழு அறிக்கை கேட்டுள்ளோம். ஏனென்றால், சரியான தீவனம் வழங்காததால்தான் சில பசுக்கள் இறந்ததாக தெரிகிறது என்றார்.


Next Story