ராஷ்டிரிய சமாஜ் பக்சா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் - நடிகர் சஞ்சய் தத் மறுப்பு


ராஷ்டிரிய சமாஜ் பக்சா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் - நடிகர் சஞ்சய் தத் மறுப்பு
x
தினத்தந்தி 26 Aug 2019 12:49 PM GMT (Updated: 26 Aug 2019 12:49 PM GMT)

ராஷ்டிரிய சமாஜ் பக்சா கட்சியில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு நடிகர் சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

மும்பை

சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகிய சஞ்சய் தத்,  செப்டம்பர் 25 ஆம் தேதி ராஷ்டிரிய சமாஜ் பக்சாவில் சேர முடிவு செய்துள்ளார். இது குறித்து ராஷ்டிரிய சமாஜ் பக்சா கட்சியின் நிறுவனரும் மகாராஷ்டிரா மாநில அமைச்சருமான மகாதேவ் ஜங்கர் தகவல் தெரிவித்துள்ளார். 

2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த ராஷ்டிரிய சமாஜ் பக்சா கட்சி, போட்டியிட்ட 6 இடங்களில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அக்கட்சியின் நிறுவனர் ஜங்கர் 2009 மக்களவைத் தொகுதியில் என்சிபி தலைவர் சரத் பவாருக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இந்த நிலையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்கள் அளிக்க பாஜகவிடம் ராஷ்டிரிய சமாஜ் பக்சா கோரிக்கை வைத்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சினிமா துறையில் தங்கள் கட்சியை விரிவுப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்  ராஷ்டிரிய சமாஜ் பக்சாவில் இணையபோவதாக  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மகாதேவ் ஜங்கர் கூறினார். 

சஞ்சய் தத் 2009 ஆம் ஆண்டு லக்னோ மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைக்க மறுத்ததால் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த அவர் கட்சியில் இருந்தும் விலகினார். 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக பரவிய வதந்திக்கு மறுப்பு தெரிவித்து சஞ்சய் தத் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இவர் ராஷ்டிரிய சமாஜ் பக்சா கட்சியில் இணைய போவதாக தகவல் வெளியானது.

ஆனால் இதனை  சஞ்சய் தத் மறுத்து உள்ளார். நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன்.  ஜங்கர் (மகாராஷ்டிர அமைச்சர் மற்றும் ஆர்.எஸ்.பி தலைவர் மகாதேவ் ஜங்கர்) ஒரு அன்பான நண்பர் - என்னுடைய சகோதரர் போன்றவர் ஆவார்.  அவருக்கு நான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என கூறி உள்ளார்.

Next Story