ஒரு தலைக்காதலால் விபரீதம் பிளஸ்-2 மாணவியை எரித்துக்கொன்றவர், தீக்குளித்து தற்கொலை


ஒரு தலைக்காதலால் விபரீதம் பிளஸ்-2 மாணவியை எரித்துக்கொன்றவர், தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 10 Oct 2019 9:00 PM GMT (Updated: 10 Oct 2019 8:37 PM GMT)

கேரளாவில் ஒருதலைக்காதலால் பிளஸ்-2 மாணவியை எரித்துக்கொன்றவர், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் கண்முன்னே மகள் பரிதாபமாக இறந்தார்.

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் கொச்சி காக்காநாடு பகுதியை சேர்ந்தவர் ஷாலன். அவரது மகள் தேவிகா (வயது17). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

எர்ணாகுளம் வடக்கு பரவூர் பகுதியை சேர்ந்தவர் மிதுன். பெயிண்டர். இவர் தேவிகாவை ஒருதலையாக காதலித்து வந்தார்.

தேவிகா 8-ம் வகுப்பு படித்தது முதலே அவரை பின்தொடர்ந்து சென்று தனது காதலை தெரிவித்து வந்தார். ஆனால் மாணவி தேவிகா அவரது காதலை ஏற்கவில்லை. ஆனாலும் பெயிண்டர் மிதுன் அவரை ஒருதலையாக காதலித்து வந்தார்.

தொடர்ந்து தனது காதலை ஏற்க மறுத்து வந்த தேவிகா மீது மிதுனுக்கு கொலை வெறி ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு ஷாலன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 2 மணி அளவில் மிதுன் தனது மீது பெட்ரோலை ஊற்றி விட்டு, பெட்ரோல் கேனுடன் வெறிபிடித்த நிலையில் தேவிகா வீட்டுக்கு சென்று, கதவை பலமாக தட்டினார்.

அப்போது ஷாலன் கதவை திறந்ததும், மிதுன் வேகமாக உள்ளே சென்று ‘தேவிகா எங்கே’? என ஆவேசமாக கேட்டார். நடப்பதை அறியாமல் தேவிகா வீட்டில் இருந்து வந்தபோது, தன்னிடம் இருந்த பெட்ரோலை தேவிகா மீது ஊற்றி தீவைத்தார். இதில் அவரது உடலில் தீப்பிடித்தது. இதில் வேதனை தாங்காமல் அவர் அலறி துடித்தார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சுதாரித்துக்கொண்டு தேவிகாவை காப்பாற்ற முயன்றனர்.

கொலை வெறி அடங்காத மிதுன் வீட்டுக்கு வெளியே வந்ததும் மீதம் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீவைத்துக்கொண்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டனர். ஆனால் தேவிகா பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மிதுனை மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

ஒருதலைக்காதலால் பெற்றோர் முன்னிலையிலேயே மகள் பலியான சோகசம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காக்கநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story