காஷ்மீரில், காவலில் வைக்கப்பட்டிருந்த 3 அரசியல்வாதிகள் விடுதலை அமைதியை கடைப்பிடிப்பதாக எழுதிக்கொடுத்தனர்


காஷ்மீரில், காவலில் வைக்கப்பட்டிருந்த 3 அரசியல்வாதிகள் விடுதலை அமைதியை கடைப்பிடிப்பதாக எழுதிக்கொடுத்தனர்
x
தினத்தந்தி 10 Oct 2019 9:30 PM GMT (Updated: 10 Oct 2019 9:10 PM GMT)

காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டிருந்த 3 அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அமைதியை கடைப்பிடிப்பதாக அவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், போராட்டக்காரர்கள், வக்கீல்கள் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்களில், முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் அடங்குவர். குறிப்பாக, பரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

250-க்கும் மேற்பட்டோர் வெளிமாநில ஜெயில்களில் அடைக்கப்பட்டனர். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுதலை செய்து, இயல்புநிலை திரும்பச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், காவலில் வைக்கப்பட்டிருந்த 3 அரசியல்வாதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். பல்வேறு காரணங்கள் அடிப்படையில், காஷ்மீர் மாநில நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

யாவர் மிர், நூர் முகமது, சொயிப் லோன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இவர்களில், யாவர் மிர், ரபியாபட் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். சொயிப் லோன், வடக்கு காஷ்மீரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். பின்னர், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

நூர் முகமது, தேசிய மாநாட்டு கட்சி ஊழியர் ஆவார். ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த பட்மலூ பகுதியில் கட்சி பணிகளை கவனித்து வந்தார்.

அமைதியை கடைப்பிடிப்பதாகவும், நன்னடத்தையுடன் செயல்படுவதாகவும் பிணைப்பத்திரத்தில் 3 பேரும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர். அதன்பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஏற்கனவே, கடந்த மாதம் 21-ந் தேதி, மக்கள் மாநாட்டு கட்சியை சேர்ந்த இம்ரான் அன்சாரி மற்றும் சையது அக்னூன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story