டெல்லி திகார் சிறையில் டி.கே.சிவகுமாருடன் சோனியா காந்தி சந்திப்பு


டெல்லி திகார் சிறையில் டி.கே.சிவகுமாருடன் சோனியா காந்தி சந்திப்பு
x
தினத்தந்தி 23 Oct 2019 5:08 AM GMT (Updated: 23 Oct 2019 8:08 PM GMT)

டெல்லி திகார் சிறையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமாரை சோனியா காந்தி சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

வரி ஏய்ப்பு, கோடிக்கணக்கான ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளின்பேரில், கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவகுமார் கடந்த மாதம் 3-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று அவரை திகார் சிறையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் அம்பிகா சோனி, டி.கே.சிவகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, “இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. மற்ற காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசால் குறிவைக்கப்படுகிறார்கள். இதில் போராடி வெளியே வரவேண்டும். எப்போதும் கட்சி உங்களுக்கு ஆதரவாக இருக்கும்” என்று டி.கே.சிவகுமாரிடம் சோனியா காந்தி உறுதி அளித்ததாக டி.கே.சுரேஷ் தெரிவித்தார்.

இதற்கிடையே சிவக்குமாருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

Next Story