அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு- தன்னார்வ குழுக்கள் மூலம் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க உ.பி போலீஸ் முடிவு


அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு-  தன்னார்வ குழுக்கள் மூலம் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க உ.பி போலீஸ் முடிவு
x
தினத்தந்தி 5 Nov 2019 4:27 PM GMT (Updated: 5 Nov 2019 4:27 PM GMT)

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் பல்வேறு பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

அயோத்தி, 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந் தேதி ஓய்வுபெறுவதால் அதற்கு முன்னர் தீர்ப்பை பிறப்பிக்க உள்ளார்.

இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட பின்னர் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.

அயோத்தி விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பகிரும்போது பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் அமைதி பணியில் ஈடுபடவும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் நபர்களை கண்டறிந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவும் அயோத்தி நகர் மட்டுமின்றி  பைசாபாத் மாவட்டம் முழுவதும் 16 ஆயிரம் தன்னார்வலர்களை உத்தர பிரதேச காவல்துறை நியமித்துள்ளது.


Next Story