இன்னும் சற்று நேரத்தில் ராஜினாமா முடிவை அறிவிக்க உள்ளார் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்?


இன்னும் சற்று நேரத்தில் ராஜினாமா முடிவை அறிவிக்க உள்ளார் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்?
x
தினத்தந்தி 26 Nov 2019 9:40 AM GMT (Updated: 26 Nov 2019 9:40 AM GMT)

மராட்டியத்தில் அதிரடி திருப்பமாக இன்னும் சற்று நேரத்தில் ராஜினாமா முடிவை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை

மராட்டியத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.

இதை எதிர்த்து  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மராட்டிய சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இன்று மாலைக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

தீர்ப்பை தொடர்ந்து மும்பை இல்லத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுடன் துணை முதலமைச்சர் அஜித் பவார் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் பதவி விலகியுள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அதுபோல் முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. தனது ராஜினாமா குறித்து 3-30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள்  கூட்டத்தில் பட்னாவிஸ் அறிவிக்க உள்ளார்.

Next Story