ஆட்சியை தக்கவைக்கிறார் எடியூரப்பா; 15 தொகுதி இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலை


ஆட்சியை தக்கவைக்கிறார் எடியூரப்பா; 15 தொகுதி இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலை
x
தினத்தந்தி 9 Dec 2019 4:48 AM GMT (Updated: 9 Dec 2019 4:48 AM GMT)

ஆட்சியை தக்கவைக்கிறார் எடியூரப்பா. 15 தொகுதி இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலையில் உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள  கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.

இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதே நேரத்தில் கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட்டதாலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன.

அந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து மற்ற 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் போட்டியிட்டனர். சிவாஜிநகர் தொகுதியில் தமிழரான சரவணாவும், ராணி பென்னூர் தொகுதியில் அருண்குமாரும் பா.ஜனதா சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டு இருந்தனர்.

காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தள  கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை சந்தித்து இருந்தது. ஒட்டு மொத்தமாக இடைத்தேர்தலில் 165 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதிகபட்சமாக ஒசக்கோட்டை தொகுதியில் 90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 15  தொகுதி இடைத்தேர்தலில்  பாஜக 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 2 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம், சுயேச்சைகள் தலா ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன.

கர்நாடகத்தில் தற்போது முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் உள்ளது. இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நீடிக்கும். 6 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.

தற்போது 11 தொகுதியில் பாஜக முன்னிலையில் இருப்பதால் எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்து கொள்வார் என தெரிகிறது.

Next Story