யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு


யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2019 11:59 AM GMT (Updated: 10 Dec 2019 9:59 PM GMT)

2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்; யாரும் கவலைப்பட தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, தனது முந்தைய ஆட்சிக்காலத்தில், 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந் தேதி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.

அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.

இருப்பினும் ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு உருவானது. அதைத் தொடர்ந்து ரூ.2,000 நோட்டுகளை அச்சிட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

தற்போது ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது.

இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெற்று மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், மீண்டும் ரூ.1,000 நோட்டுகள் வெளியிடப்போவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ரூ.2,000 நோட்டு வாங்குவதை தவிர்க்கின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி., விஷாம்பார் பிரசாத் நிஷாத் நேற்று கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர், “ரூ.2,000 நோட்டுகளால் கருப்பு பணம் அதிகரித்துவிட்டது. ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெற்று விட்டு மீண்டும் ரூ.1,000 நோட்டுகளை அறிமுகம் செய்யப்போவதாக மக்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளதே?” என கேட்டார்.

இந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் ரூ.2,000 நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்பதை மத்திய அரசின் சார்பில் நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாக்குர் உணர்த்தினார்.

இதையொட்டி அவர் கூறியதாவது:-

இதுதான் (ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை) இப்போது உருவாகி உள்ள உண்மையான கவலையாக அமைந்துள்ளது. இதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை என்று கருதுகிறேன்.

கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருதல், கள்ள நோட்டுகளை ஒழித்துக்கட்டுதல், பயங்கரவாதத்துக்கும், இடதுசாரி தீவிரவாதத்துக்கும் நிதி அளிப்பதற்கான அடிப்படையை தகர்த்தல், வரி அடிப்படையை விரிவுபடுத்துவதற்கு ஏற்ற வகையில் முறையற்ற பொருளாதாரத்தை முறையான பொருளாதாரமாக மாற்றுதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல், இந்தியாவை குறைந்த அளவு காகித பண பொருளாதார நாடாக மாற்றுவதற்கு டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவைதான் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கங்கள் ஆகும்.

கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் பண பரிமாற்றம் பெருகி வந்துள்ளது. 2017-18-ம் ஆண்டில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தின் மதிப்பு ரூ.2,071 கோடியாக இருந்தது. 2018-19-ம் ஆண்டில் இது ரூ.3,134 கோடியாக உயர்ந்துள்ளது. இது 51 சதவீத வளர்ச்சி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

எனவே ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

Next Story