பொதுமக்களே வன்முறையில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்; மம்தா பானர்ஜி வேண்டுகோள்


பொதுமக்களே வன்முறையில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்; மம்தா பானர்ஜி வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 Dec 2019 2:47 PM GMT (Updated: 14 Dec 2019 2:47 PM GMT)

தயவு செய்து வன்முறையில் ஈடுபடாதீர்கள் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பொதுமக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.

கொல்கத்தா,

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகும் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினரான இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர்,  ஜெயின் சமூகத்தினர், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமைச்சட்டம் 1955ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.  இதனை அடுத்து கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர், மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்தது. கடும் எதிர்ப்புகளை மீறி அந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை சட்டம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடைபெறும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்காளத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் மூர்ஷிதாபாத் மாவட்டங்கள் மற்றும் ஹவுரா கிராம பகுதியிலும் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

கிழக்கு ரெயில்வேக்கு உட்பட்ட சீல்டா மற்றும் ஹஸ்னாபாத் பிரிவுக்கு இடையே ரெயில் சேவை முடங்கியது.

இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, குடியுரிமை திருத்த சட்டம் 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தப்படாது என்பது உறுதி.  அவற்றை நாங்கள் அனுமதிக்க போவதில்லை.

அதனால் மக்களே தயவு செய்து நீங்கள் சாலை மறியலில் ஈடுபடாதீர்கள்.  சட்டத்தினை கைகளில் எடுத்து கொள்ளாதீர்கள்.

யாரும் இடையூறுகள் எதனையும் உருவாக்கவோ அல்லது எந்த வகையிலான வன்முறையில் ஈடுபடுவதோ வேண்டாமென ஒவ்வொருவரையும் நான் வேண்டி கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Next Story