ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்


ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்
x
தினத்தந்தி 14 Jan 2020 5:39 AM GMT (Updated: 14 Jan 2020 5:39 AM GMT)

ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராக ஏ.கே.கண்ணன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

மதுரை அவனியாபுரத்தில் நாளையும் (புதன்கிழமை), பாலமேட்டில் 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்த நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும். கலெக்டர் அமைத்துள்ள கமிட்டியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்தவரை கமிட்டி உறுப்பினராக சேர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை நேற்று நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த ஒருங்கிணைப்பு மற்றும் அறிவுரை என 2 குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இந்த குழு நாளை (15-ந்தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்தும். அதன்படி ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் நியமிக்கப்படுகிறார்.

உறுப்பினர்களாக மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிவுரை குழுவில் அவனியாபுரத்தில் வசிக்கும் 16 பேர் உறுப்பினர்களாக  நியமிக்கப்படுகின்றனர். ஒருங்கிணைப்பு குழுவின் கீழ் தான் அறிவுரை குழு செயல்பட வேண்டும்.

அவர்கள் ஜல்லிக்கட்டு விழாவில் தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ஒருங்கிணைப்பு குழு, போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகளை கூட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி முழுவதையும் வீடியோ பதிவு செய்து, அறிக்கையுடன் ஐகோர்ட்டு பதிவுத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதேபோல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவையும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு நடத்த வேண்டும் என்றும், அறிவுரை குழு உறுப்பினர்களாக 36 பேரை நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவுக்கான விதிமுறைகள் அனைத்தும் அலங்காநல்லூருக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில்  ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராக ஏ.கே.கண்ணன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Next Story