டெல்லி தேர்தல் பேரணியில் சர்ச்சை பேச்சு; மத்திய இணை மந்திரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


டெல்லி தேர்தல் பேரணியில் சர்ச்சை பேச்சு; மத்திய இணை மந்திரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 28 Jan 2020 3:07 PM GMT (Updated: 28 Jan 2020 3:07 PM GMT)

டெல்லியில் நடந்த தேர்தல் பேரணியில் சர்ச்சையாக பேசிய மத்திய இணை மந்திரி அனுராக் தாக்கூருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 8ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  தேர்தல் முடிவுகள் வருகிற பிப்ரவரி 11ந்தேதி வெளியிடப்படும்.

தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வின் நட்சத்திர பேச்சாளரான மத்திய இணை மந்திரி அனுராக் தாக்கூர் டெல்லியில் ரித்தாலா தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் மணீஷ் சவுத்ரிக்கு ஆதரவாக பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்பொழுது, துரோகிகளை சுட்டு தள்ளுங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

தேர்தல் நேரத்தில் இதுபோன்று மக்களை தூண்ட கூடிய வகையில் அனுராக் பேசியது பற்றி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் அஜய் மேக்கன் மற்றும் சுபாஷ் சோப்ரா ஆகியோர் புகார் அளித்தனர்.  டெல்லி நகரின் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைக்கும் தெளிவான நோக்குடன் வெறுப்புக்குரிய வகையில் டெல்லியின் பல்வேறு இடங்களில் பேசி வருகின்றார் என அதில் தெரிவித்து இருந்தனர்.  அனுராக் மற்றும் பிரவேஷ் வர்மா ஆகிய இருவர் மீதும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அனுராக் பேசிய முழு விவரங்களை வீடியோக்களுடன் அளிக்கும்படி டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.  தொடர்ந்து அனுராக் பதிலளிக்கும்படி அவருக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளது.

Next Story