ரிக்ஷா ஓட்டுனரின் மகள் திருமணத்திற்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி


ரிக்ஷா ஓட்டுனரின் மகள் திருமணத்திற்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 16 Feb 2020 10:59 AM GMT (Updated: 16 Feb 2020 10:59 AM GMT)

ரிக்ஷா ஓட்டுனரின் மகள் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் அனுப்பியது அக்குடும்பத்தினரை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாரணாசி,

உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில், கடந்த வருடம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார் பிரதமர் மோடி.  அவர், வாரணாசியில் உள்ள தோம்ரி என்ற கிராமம் ஒன்றை தத்தெடுத்தும் உள்ளார்.

இந்த கிராமத்தில் வசித்து வருபவர் மங்கள் கேவத்.  இவரது மனைவி ரேணு தேவி.  இந்த தம்பதியின் மகளுக்கு கடந்த 12ந்தேதி திருமணம் நடந்தது.  இதற்கான முதல் அழைப்பிதழை டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று கேவத் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடியிடம் இருந்து கடந்த 8ந்தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது.  இதனை கண்டு கேவத் மற்றும் அவரது குடும்பத்தினர் பரவசத்தில் ஆழ்ந்து விட்டனர்.

இதுபற்றி கேவத் கூறும்பொழுது, சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் மனிதர் மீதும் பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார் என்பதற்கு இந்த கடிதம் சான்று என கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்திற்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடியை சந்திக்க எங்களது குடும்பம் ஆவலுடன் உள்ளது என கேவத்தின் மனைவி ரேணு கூறியுள்ளார்.  எங்களுடைய குடும்பம் சந்தித்து வரும் கஷ்டங்களை பற்றி அவரிடம் எடுத்து கூறுவோம் என்றும் அவர் கூறினார்.

Next Story